திங்கள், 3 டிசம்பர், 2012

அம்மாவின் கைப்பேசி!

கைப்பேசி வழியே.....

தங்கை-
தலைதீபவளிக்கென்று
இரண்டு சவரன் நகையும்,
பத்தாயிரம் பணமும் கேட்டாள்!

அக்கா-
முதல் தீபாவளி காணும்
தன் குழந்தைக்கு
தங்கத்திலே தோடும்,
வெள்ளியிலே கொலுசும் கேட்டாள்!

தம்பி-
கல்லூரி செல்லும் அவனுக்கு
தீபாவளி பரிசாக
புதிதாய் ஒரு மொபைல் கேட்டான்!

அப்பா-
வெளியூருக்கு செல்லும் போது
பந்தாவாக கட்டிக்கொள்ள
தங்கநிறத்தில் ஒரு வாட்ச் கேட்டார்!

அம்மா..........
"எங்கண்ணுக்குள்ளயே இருக்கிற சாமி"
"எப்படா கண்ணு ஊருக்கு வருவே?"
ஏக்கத்தோடும் கண்ணீரோடும்
என்னைக் கேட்டாள்!

நான்-
அடுத்த தீபாவளிக்கு என்றேன்
கனத்த இதயத்தோடு........!

எழுத்து-
வஞ்சி.க.தங்கமணி.